வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக எஸ்.எம்.சமன் பந்துலசேன இன்று பதவியேற்றுள்ளார்.

இதுவரை வவுனியா அரசாங்க அதிபராக இருந்த ஐ.எம்.கனீபா பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.

இந்த நிலையில் அநுராதபுர மாவட்டத்தின் உதவி‌ அரசாங்க அதிபராகவும், பின்னர் வட மத்திய மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன, புதிய அரசாங்க அதிபராக பதவியேற்றுள்ளார்.

தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியிருந்த நிலையில், புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.