வவுனியா பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் குறித்து தகவல் உரிமைச்சட்டத்தினால் தகவல் கோரல்

வவுனியா பிரதேச செயலகத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகள் மற்றும் பிரதேச செயலகப்பிரிவில் மரம் வெட்டுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட விடயங்கள் உட்பட கிணறுகள், பொதுக்கிணறுகள் போன்றவைகள் குறித்து தகவல் உரிமைச்சட்டத்தின் ஊடாக தகவல் கோரப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகத்தினால் காணி விடயங்களில் மோசடிகள் இடம்பெற்றதாக, ஊழலற்ற மக்கள் அமைப்பு தகவல் உரிமைச்சட்டத்தின் ஊடாக கடந்த காலங்களில் தகவல் கேரியிருந்த நிலையில் அவை தொடர்பாக மேலிடங்களுக்கு அறிவித்ததன் பலனாக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் தற்போது ஊழலற்ற மக்கள் அமைப்பின் தலைவர் க.பார்த்தீபனால் குறித்த தகவல்களை கோரி மாவட்ட செயலகம் மற்றும் வவுனியா பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பத்தில் கடந்த 7 வருடங்களில் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவை தொடர்பான முழுமையான விபரங்களும் கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கிணறுகளின் எண்ணிக்கை பொதுக்கிணறுகளின் விடயங்கள் கோரியும் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் மரங்கள் வெட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அரசாங்க அதிபரால் பிரதேச செயலாளருக்கு வழங்கப்பட்ட 204 படிவங்களின் தொடர் இலக்கங்கள் அவை வழங்கப்பட்ட திகதி என்பவற்றையும் அவற்றை உறுதிப்படுத்தியும் தகவல் கோரப்பட்டுள்ளது.

இதனூடாக அரச காணிகளில் வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் அனுமதி பெற்றவர்களின் விபரங்களும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.