வயோதிப தம்பதியினரை சித்திரவதைக்கு உட்படுத்தி கொள்ளை;யாழில் சம்பவம்

யாழ்.உடுவில் அம்பலவாணர் வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியைத் தாக்கிவிட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது.

வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்துவிட்டு குடும்பத் தலைவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தி கொள்ளைக் கும்பல் சித்திரவதை செய்துள்ளது.

அதனால் படுகாயமடைந்த குடும்பத்தலைவர், தெல்லிப்பழை வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வயோதிபத் தம்பதியின் 3 பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல், எங்களைக் கட்டிவைத்தது. கணவரின் தலையில் கூரிய ஆயுதத்தால் குத்தியது. எனது கன்னத்தில் அறைந்தது. அதனால் நாம் நிலைகுலைந்தோம்.

சுமார் 3 மணிநேரம் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு கும்பல் தப்பித்தது என்று குடும்பப் பெண் விசாரணையில் தெரிவித்தார்.

கொள்ளையர்கள் மூவரும் 20 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களா தான். அவர்களில் ஒருவன் கைகளில் கையுறை போட்டிருந்தான்.

வீட்டில் பிள்ளைகளின் நகைகளுடன் 15 பவுண் நகைகள் இருந்தன. 5 இலட்சம் ரூபா பணமும் இருந்தது. அவை கொள்ளையிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மோப்ப நாய் அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.