வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்துள்ள புத்த விகாரை

வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்தின் வழிபாட்டு பகுதி, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை பலதரப்பினரிடம் தெரிவித்தும் இதுவரையும் எதுவித பலனும் ஏற்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரதேசம் யுத்தத்தின் போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு ஒரு பெரிய புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டது. இந்தப் பிரதேசத்தில் பௌத்த மதத்தவர்கள் எவரும் இல்லாத நிலையில் இங்கு பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது நில ஆக்கிரமிப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கை என மக்களால் அஞ்சப்படுகின்றது.

இது தொடர்பாக எவரும் கவனத்தில் கொள்வதாக காணப்படவில்லை. அண்மையில் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு  சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. முல்லைத்தீவு மாவட்ட எல்லைக்குட்பட்ட பிரதேசத்திலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருமாறு உரியவர்களிடம் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.