வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் தீர்வின்றி 6ம் நாளை எட்டியது

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும்  தொடர்கின்றது.

கடந்த முதலாம் திகதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், தமக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் கடந்த எட்டாம் திகதி தொடக்கம் தமது போராட்ட வடிவத்தை உணவுத் தவிர்ப்புப் போராட்டமாக மாற்றி முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டம் இடம்பெறுகின்ற இடத்திற்கு ஒரு சில தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சென்றிருந்த போதும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இதுவரை தம்மை வந்து சந்திக்கவல்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை மீளப் பெற்றுத் தருமாறு கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு, அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிரந்தர நியமனக் கடிதம் பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் 454 பேர், தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரி தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.