வடக்கு, கிழக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தும் பொலிஸார் -கஜேந்திரன் MP

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை வடக்கு, கிழக்கில் மக்களை பழிவாங்கும் கருவியாக பொலிஸார் பயன்படுத்துவதாக   தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக வடமாகாணத்துக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லையென எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்கவிதிகள் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தமானிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் நாடளாவிய ரீதியில் வைத்தியர்களும் தாதியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுகின்றனர். இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஆனாலும் வடக்கு, கிழக்கில் கொவிட் -19 சிகிச்சை வைத்திய நிலையங்களை உருவாக்குவதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. நிதி பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கில் கொரோனா நோயாளர்களை கையாள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுகிறது.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் 12ஆயிரம் நோயாளர்களால் பயன்படுத்தப்பட்டுவந்த வைத்தியசாலை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இங்கு சிகிச்சைக்கு செல்லும் மக்கள் 40 கி.மீ. தொலைவில் உள்ள பருத்தித்துறை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது. இங்கு 12 ஆயிரம் நோயாளர்களை கருத்திற்கொண்டு அவர்களுக்கு மாற்று வைத்திய முறைகளை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் செய்யப்பட வேண்டும் ”என்றார்.