வடக்கில் ஊரடங்கு செவ்வாய் காலை வரை நீடிப்பு

வடமாகாணத்தில் நாளை காலை 6 மணி முதல் தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டமையை அடுத்து வட மாகாணத்தை அரசாங்கம் முற்றாகச் ‘சீல்’ செய்திருக்கிறது.

இம்மாவட்டங்களில் காலை 6.00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

வடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

கடந்த தினங்களில் வடக்கிற்கு பயணம்செய்த சுவிட்சர்லாந்தில் இருந்து வருகைதந்த கொரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம்காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும்.

ஐந்து மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் கொரோனா தாக்கத்திற்கு உற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் மக்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம் அங்கு வாழும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.