வடகிழக்கு தழுவிய பூரண கர்தாலுக்கு ஆதரவு

இறந்தவர்களை அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை இந்த அரசு தடுத்தமைக்கு எதிராக நாளை திங்கட்கிழமை 28.09.2020 வடக்கு கிழக்கு தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கத்துக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ளெியிடப்பட்ட அறிக்கையில்,

இராணுவ கெடுபிடிகள் சம காலத்தில் அதிகரித்திருக்கின்ற சூழ்நிலையானது பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கும் அவர்களின் சுதந்திரமான நடவடிக்கைகளுக்கும் ஒரு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன் இதனை அரசாங்கமும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளது.

இலங்கையின் அரசியல் யாப்பின் படி குற்றவியல் நடைமுறை கோவையின் பொது தொல்லைகள் ஏற்பாடுகளின் கீழ், நினைவேந்தல் உரிமை, ஒன்றுகூடும் உரிமை, பேச்சுச்சுதந்திரம், மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் என்பன யாப்பின் வழி வழங்கப்பட்டாலும் வடக்கு கிழக்கில் இவை மட்டுப்படுத்தப்பட்டவையாக காணப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இறந்தவர்களை நினைவுகூருவது என்பது உலக அளவிலும் உள்ளக அளவிலும் ஒரு கலாசாரம் சார்ந்த உரிமையாகவும் அரசியல் உரிமையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் யுத்தத்திற்கு பின்னரான சர்வதேச பொறிமுறையான நிலைமாறு கால நீதிப் பொறிமுறையும் ஒன்றாகும். நிலைமாறு கால நீதியை முன்னெடுக்கும் இத்தருணத்தில் இறந்தோரை நினைவுகூருவதற்கான தடையை நீதிமன்றம் பிறப்பித்தமையானது சர்வதேச நீதிப்பொறிமுறையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.

அண்மைக்காலமாக பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையிலான நெருக்கத்தை மேலும் சிதைவுற செய்திருக்கிறது. குறிப்பாக பொலிஸ் ஊடாக நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதித்த இன்றைய அரசாங்கம் இலங்கையினுடைய நீதித்துறை மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த காரணமாக மாற்றியிருக்கிறது.
இவ்வாறான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மக்கள் மீது திணிக்காமல் இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை ஏற்று அங்கிகரிக்க வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும் இத்தகைய நினைவேந்தலை தடுக்க முயல்வது இவ் அரசாங்கத்தின் பாதுகாப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.

ஒரு முழுமையான நீதிப்பொறிமுறையின் கீழ் மலர்ந்திருக்கும் இந்த புதிய அரசாங்கம், தமிழ் மக்களையும் இலங்கை பிரஜைகள் என்ற வகையில் சமாதானம், நல்லிணக்கம், சமத்துவம், சுதந்திரம், இறைமை போன்ற அம்சங்களுடன் நீண்ட சமாதான நோக்குடன் பயணிக்கும் எண்ணப்பாங்கில் நீடித்த சமாதானமும் மீள் நல்லிணக்கமும் இலங்கையில் நிலைபெற வழிசெய்ய வேண்டும்.

எனவே தமிழ் மக்களுக்கான நீதியையும் இறந்தவர்களையும் அவர்களது உறவுகள் மற்றும் அவர்களது மனநிலையையும் வெளிப்பாட்டையும் அரசு கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்ற வகையில் நாளைய தினம் 28.09.2020 வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண செயற்பாட்டு முடக்கப் போராட்டத்துக்கு கல்விச்செயற்பாடுகள் மற்றும் பரீட்சைகள் முதலியவற்றை புறக்கணித்து
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் பூரண ஆதரவை வழங்குகிறது” என்று கூறப்பட்டுள்ளது.