யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்தும் ஈரான்

அணு ஆராய்ச்சி மற்றும் சோதனையில் இருக்கும் அனைத்து எல்லைக் கோடுகளையும் ஈரான் நீக்கவுள்ளது. 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்த உடன்படிக்கைகளை மீறி மீண்டும் ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிப்பை விரைவுபடுத்த மையநீக்கிகளை உருவாக்கத் தொடங்கி விட்டதாக அந்நாட்டுத் தலைவர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, மீண்டும் ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்தது.

அதற்குப் பதிலடியாக ஏற்கனவே ஒப்பந்த உடன்படிக்கைகளை ஈரான் இருமுறை மீறிவிட்டது.

3.5 சதவீதம் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுஉலைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம். ஆனால் 90 சதவீதம் அளவிற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்.

ஆனால் அமைதியான சூழலுக்கான நோக்கத்திலேயே அணு திட்டத்தை செயற்படுத்துவதாக ஈரான் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றது.