யுரேனியம் செறிவூட்டலைத் தொடங்கும் ஈரான்

நிலத்திற்கடியில் மீண்டும் யுரேனியம் செறிவூட்டலைத் தொடங்க இருப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும் போது, “தெஹ்ரானிற்கு தெற்கே உள்ள நிலத்தடியில் மீண்டும் ஈரான் யுரேனியம் செறிவூட்டலைத் தொடங்கவுள்ளோம்” என்றார்.

முன்னதாக, அணுசக்தி ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையின் முன்னேற்றத்திற்காக 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கைவிட முடிவு செய்திருப்பதாக ஈரான் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் யுரேனியம் செறிவூட்டலுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அணுசக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் அணு ஆயுதத் தயாரிப்பிற்குப் பயன்படுத்த மாட்டோம் என்றும் ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஈரான் அணு ஆயுத சோதனை ஒப்பந்தங்களை அவ்வப்போது மீறி வருகின்றது. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றது.