யாழ். நகரில் காப்புறுதி நிறுவன ஊழியர்கள் 23 பேருக்கு தொற்று

 

நாட்டின் பிரபலமான காப்புறுதி நிறுவனம் ஒன்றின் யாழ். நகர கிளை அலுவலகத்தின் ஊழியர்க்ள 23 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

யாழ். நகரில் வேம்படி சந்திக்கு அண்மையாக செயல்படும் குறித்த நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவருக்கு நோய் அறிகுறி காணப்பட்டமையால் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது.

அவருக்கு தொற்று உறுதியானமையை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனை முடிவில் நேற்றுவரை அவர்களில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வளவு பெருந்தொகையினர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமையால், அந்நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு காப்புறுதி நிறுவனப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரியவந்தது.