யாழ்ப்பாணத்தை அடுத்து மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையம்!

மட்டக்களப்பு விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி நடவடிக்கைக்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கம் தனது விமான பயணங்களை மட்டக்களப்பு விமான நிலையம் வரை மேற்கொள்ள விரும்புவதாக அமைச்சர் கூறியுள்ளார்.

நாட்டிலுள்ள ஏனைய சர்வதேச விமான நிலையங்களான கட்டுநாயக்க, யாழ்ப்பாணம் ஆகிய விமான நிலையங்களுக்கு இந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.