யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில், கடந்த வாரம் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மிக அழகான அரியவகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வடக்கு கடற்படை நிறைவேற்றுப் பிரிவிற்குட்பட்ட கட்டளைத் தளபதி றியல் அட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்றே இதைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
400 மீற்றர் நீளத்தைக் கொண்டுள்ள இந்தப் பவளப்பாறையானது கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவதில் இன்றியமையாத பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பவளப்பாறைகள் இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளினால் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் இவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பிரதேசங்களை படையினர் இலக்கு வைப்பதாக தோன்றுகின்றது. மண்டைதீவு கடற்பிரதேசத்தை சுற்றுலா மையம் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தற்போது காங்கேசன்துறை கடலில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற கடல் நடவடிக்கை ஆய்வுகள் ஊடாக கடற்படையினர் எந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.