வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் விருப்பத்தின் பேரில் இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புத்தகத் திருவிழா 2019 ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ் ஆயர், வடக்கு மாகாண அரச அதிகாரிகள், புத்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வை மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். யாழில் முதன்முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்கண்காட்சி எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப் படைப்புக்கள் உட்பட உள்ளுர் மற்றும் இந்தியப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை 30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட், புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது என்றும், இவ்வாறான நிகழ்வுகள் எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் குறிப்பிட்டார்.