யார் இந்த வைகுந்தவாசகன்? -பா.அரியநேத்திரன்

1982,நவம்பர்,05, இன்றைய தினத்தில் இந்தியாவில் இருந்து வைகுந்தவாசகன் நாடு  கடத்தப்பட்டார்.

அவர் நாடு கடத்தப்பட்டு சுமார் 38 வருடம் கடந்த நிலையில், அவர் தொடர்பான பதிவு இது.

1978 இல் அவை ஐ.நா சபையில், தாம் தமிழீழத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லி ‘தமிழீழம்’ என்ற நாட்டை ஐ நா வில் பிரகடனம் செய்தார்.

அளவெட்டியைப் பிறப்பிடமாக் கொண்ட கிருஷ்ணா வைகுந்தவாசன் சட்டத்தரணியாகி சம்பியாவுக்கு நீதவான் பதவி பெற்றுப் பின்னர் லண்டன் சென்று லண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இலங்கைக் கிளையின் முக்கியஸ்தராகப் பணியாற்றினார்.

ஐ.நாவில் தனியொருவராக இவர் செய்த சாதனை இன்று பேரவையாக நிற்கும் தமிழர் அமைப்புகளுக்கெல்லாம் ஒரு படிப்பினையும் சவாலுமாகும் எனலாம்.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சராக அன்று விளங்கிய ஏ .சி .எஸ் ஹமீத் அவர்கள் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஷ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் இப்படிச் சொன்னார்:-

‘ எனது பெயர் கிருஷ்ணா. சிறீலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன்.

தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறீலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது’

இவ்வளவும் பேசி முடித்ததும் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள்.

அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். ‘நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே – இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது?’ எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.

‘ நான் குறிப்பிடும் தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் தென்னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் பாக்கு நீரிணையை அண்மித்ததாகவும் வங்காள விரிகுடாக் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது.

1978 இற்குப் பின்னர் அதாவது ஐ.நா வில் அத்து மீறிப் பிரவேசித்து பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு ஒரு சர்ச்சைக்குரியவரான பின்னர், 1980 இல் திருமதி இந்திரா காந்தியை புது டெல்லி சென்று சந்தித்திருக்கிறார் திரு வைகுந்தவாசன்.

1979 இல் ஜே. ஆர் ஒரு வருடத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி தமது மருகனை வடக்கிற்கு அனுப்பிய பின்னர் இடம்பெற்ற இளைஞர்கள் படு கொலை களையடுத்து அன்னை இந்திரா காந்தியிடம் ஈழத் தமிழரின் துன்பங்கள் பற்றி குறிப்பாக இளைஞர்கள் படும் இன்னல்கள் பற்றி ஒரு அறிக்கையை 1979 இல் அனுப்பியிருந்தார்.

அதற்கு இந்திரா காந்தி அவர்கள், மொராஜி தேசாயின் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சி இலங்கை அரசுடன் கொண்டுள்ள உறவுகள் பற்றிக் கவலை தெரிவித்ததுடன் அதனால் இலங்கையில் தமிழ் மக்கள் படும் துயரங்கள் பற்றி ஜனதா அரசு அக்கறை கொள்ளுமா எனத் தாம் சந்தேகப்படுவதையும் தேர்தலில் கவனமாக இருப்பதால் எவ்வகையிலும் மக்கள் கவனத்தில் கொண்டு செல்லக் கூடிய சாத்தியங்கள் பற்றி தாம் பார்ப்பதாகவும் வைகுந்தவாச னுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

அமரர் வைகுந்தவாசன் அவர்கள் 1980 நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சிக்கு ஆதரவு தேடும் பொருட்டு இந்தியா சென்றிருந்த போது 1982 நவம்பர் 5 இந்திய அரசினால் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

 கிருஷ்ணா வைகுந்தவாசன் குறித்து சிறு குறிப்பு

*கிருஷ்ணா வைகுந்தவாசன், ஏப்ரல் 15, 1920 ஜனவரி   மாதம் யாழ் மாவட்டம்     அளவெட்டியில் பிறந்தார்.

*இவர் முன்னாள் சட்டத்தரணியும், தமிழ் ஆர்வலரும், தொழிற்சங்க வாதியும் ஆவார்.

*1978- அக்டோபர் 5ம் நாள், ஈழத் தமிழர்களின் பிரச்சனையை ஐ.நா அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினை தனி நாடாக அங்கீகரிக்குமாறு கோரிக்கை வைத்தார்.

*இலங்கை அரச சேவையில் எழுத்தராகப் பணியாற்றி, அரசு எழுத்தர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார்.

*1950ஆண்டு மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராக பணியாற்றினார். தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார்.

*பின் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். (10 ஆண்டுகள்)

*ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1965 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.

*1971 இல் சாம்பியா நாட்டில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்று சென்றார்.

*1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டார்.

*1978 இல், இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணியாற்றியபோது நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க வழக்குரைஞர்கள் கழகத்தின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்.

*தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்  லண்டன் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார்.

*நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சிக்கு ஆதரவு தேடும் பொருட்டு இந்தியா சென்றிருந்த போது 1982 நவம்பர் 5ம் நாள் இந்திய அரசினால் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.