மோடியின் வியூகத்தை பின்பற்றி தேர்தலில் வெற்றிபெற ஐ.தே.க முயற்சி

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் வியூகத்தை பின்பற்றி வெற்றிபெறுவதற்கு ஐ.தே.க முயற்சிப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாண யக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பிரதமர் மோடி இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தியே தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் மோடியின் ஆட்சியில் தொழிலற்றவர்களின் வீதம் அதிகரித்து காணப் பட்டதுடன் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். ஆனாலும் அவர் வெற்றியடைந்துள்ளார்.

இதற்கு காரணம் செல்வந்தர்களின் செல்வாக்கு மற்றும் இந்து, முஸ்லிம் மக்களிடத்தில் காணப்பட்ட பிளவே ஆகும்.

அந்தவகையில் தற்போது, பிரதமர் மோடியின் வழிமுறையை பின்பற்ற ஐ.தே.க.வும் முனைகின்றது. அதாவது சிங்கள, முஸ்லிம் மக்களிடத்தில் முரண் பாட்டை ஏற்படுத்தி அதனூடாக அரசியல் இலாபத்தை பெற்றுகொள்ள முயற்சிக்கின்றது.

ஆகையால் இத்தகைய செயற்பாட்டுக்கு எதிராக பொதுஜன பெரமுன மக்களை அணிதிரட்ட வேண்டும்” என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.