மூட நம்பிக்கையால் சிறுமி வன் கொடுமையின் பின் கொலை – இருவர் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாந்திரீக வேலைகளுக்காகச் சிறுமையைக் கடத்திக் கொன்ற சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கான்பூரின் கதம்பூர் என்ற கிராமத்தில், தீபாவளி பண்டிகை அன்று இரவு நேரத்தில் பட்டாசு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்ற 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியைக் கடத்திக் கொன்ற சம்பவம் தொடர்பாக, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்குல் குரில் மற்றும் பீரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பரசுராம் என்பவர் மாந்திரீக வேலைகளுக்காகச் சிறுமியின் கல்லீரலை வெட்டி எடுத்து வரக் கூறியதால் இரண்டு பேரும் சிறுமியைக் கொன்று கல்லீரலை எடுத்து பரசுராமிடம் கொடுத்ததாக The Wire  செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக பரசுராம் அன்குல் மற்றும் பீரனுக்கு 1500 ரூபாய் கூலி கொடுத்துள்ளார்.

சிறுமியின் கல்லீரலைச் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் மாந்திரீக வேலைகளுக்காக இந்தக் கொலை நடந்திருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து  கொலிஸ் தரப்பில், “குற்றத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பேரும் நன்றாகக் குடித்துவிட்டு அந்தச் சிறுமியைக் கடத்திப் பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்டிருக்கிறார்கள். பின்னர் சிறுமியைக் கொன்று வயிற்றை அறுத்து கல்லீரலை பரசுராமிடம் கொண்டு கொடுத்திருக்கிறார்கள்.” என்று கூறியுள்ளதாக The Wire  செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக பரசுராமின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.