முஸ்லீம் அமைச்சர்களின் பதவிவிலகல் கடிதங்கள் இன்னும் ஒப்படைக்கப் படவில்லை – அமைச்சுகளின் செயலாளர்கள்

அரசாங்கத்தின் பொறுப்புக்களிலிருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இதுவரை ஒப்படைக்கப்படாதுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேபோன்று, இவ்வாறு இராஜினாமா செய்த எவரும் தமது உத்தியோகபுர்வ வாகனங்களை ஒப்படைக்காதுள்ளதாகவும், தமது தனிப்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நீக்க வில்லையெனவும் அந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று (05) இரவு வரையில் எந்தவொரு அமைச்சரும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கவில்லையென ஜனாதிபதி செயலக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது வாகனங்களை ஒப்படைக்கவில்லையெனவும், தமது தனிப்பட்ட செயலணியை பதவி நீக்கவில்லையென, முஸ்லிம் அமைச்சர்கள் பதவி வகித்த அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டபோது அவர்களும் இதனையே குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முஸ்லிம் அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமிடம் வினவிய போது அவர் குறிப்பிட்டுள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று மேலும் அறிவித்துள்ளது.