முஸ்லிம் நாட்டு தலைவர்களுடன் கோட்டா, மஹிந்த அவசர பேச்சு – ஆதரவைப் பெற முயற்சி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா குறித்த பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும் முஸ்லிம் நாடுகள் பலவற்றின் தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு ஆதரவைக் கோரியிருக்கின்றார்கள்.

இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் யுசெப் ஏ.அலோத்திமேனுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடர்புகொண்ட ஜனாதிபதி, இரு தரப்பு உறவுகள் குறித்தும், சிறிலங்காவில் முஸ்லிம் மக்களின் நிலை தொடர்பாகவும் உரையாடியுள்ளார். கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருப்பதற்கு இஸ்லாமிய நாடுகள் ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் நன்றி தெரிவித்தார்.

இதேவேளையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பஹ்ரெயின் மன்னர் சல்மான் பின் ஹமீட்டுடன் தொலைபேசி மூலமாகப் பேசியுள்ளார். இருதரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார்.