முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது -எச்.எம்.எம்.ஹரீஸ்

ஒரு கையால் தட்டி சத்தம் வராது. இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டும். முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை  பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் சமூர்த்தி பயனாளிகளுக்கு  உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (06) மாலை சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான தயா கமகே அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கல்முனை பிரதேச செயலாளர் திரு எம்.எம்.நஸீர், கல்முனை தொகுதி ஐ.தே. க. அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ரஸாக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, சமூர்த்தி திணைக்கள உயரதிகாரிகள், சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் 1100  பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,
ஸஹ்ரான் எனும் சிறிய குழுவினர் செய்த தாக்குத்தலின் பின்னராக அண்மைய காலங்களில் எமது மக்களின் மீது நடக்கும் அநீதிகள் மனவேதனையாக உள்ளது. ஹபாயா, ஹிஜாப் அணிவதில் எமது பெண்களுக்கு வந்த சிக்கலையும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளாகிய  நாங்கள் போராடி வெற்றி பெற்றோம்.
கண்டியில் எமது அமைச்சர்களில் ஒருவரான றிசாத் அவர்களையும் முஸ்லிம் ஆளுணர்களையும் குறிவைத்து அத்துரலிய தேரர் இருந்த உண்ணாவிரதம் மூன்று நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அது நாட்டுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நான் எல்லோரையும் ஒன்று திரட்டி 09 அமைச்சர்களையும் இராஜினாமா செய்ய வைத்து நாட்டை பாதுகாத்தோம். இல்லாது போனால் இந்த நாடு இனவாதத்தில் தீக்கீரையாகி இருக்கும்.
இப்போது எமது பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க முன்வருகிறது. ஜனாதிபதி தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ள இந்த காலகட்டத்தில் எமது இருப்புக்கு பாரிய சவால் இருக்கிறது.
எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அஹமத், ஏ.ஆர்.எம். மன்சூர், தலைவர் அஷ்ரப், போன்றோர்கள் கல்முனையை மாவட்ட காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் அடங்கிய முக்கிய நகரமாக மாற்றியமைத்தவர்கள். கல்முனையை செதுக்கியத்தில் முஸ்லிங்களின் பங்கு அளப்பரியது. இதனை அறியாமல் தமிழ் முஸ்லிம் உறவை சீரழித்து கல்முனையை கூறுபோட மூன்றாம் தரப்பின் உதவியுடன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெளிமாவட்ட அரசியல் தலைவர்கள் இதனை வழிநடத்தி செய்கிறார்கள். அரசாங்கத்துக்கும், அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளோம். கல்முனை பிரிப்பதாக இருந்தால் ஆங்கிலையரின் ஆட்சி காலத்தில் இருந்தது போல பிரியுங்கள்.
கிளிநொச்சி, யாழ், வவுனியா, மட்டக்களப்பு, போன்ற பல நகரங்கள் தமிழ் மக்களின் பிரதான நகரங்களாக இருக்கிறது. ஆனால் கல்முனை மாநகரம் முஸ்லிங்களின் தாயகம் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ் தலைமைகள் நியாயமில்லாமல் நடக்கிறார்கள், அவர்கள் இதன் பின்விளைவுகளை சிந்திக்க வேண்டும். யாழில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தழுதலுத்த குரலில்  “தமிழர்களின் தீர்வு திட்டம் மழுங்கடிக்கப்படுகிறது, அரசாங்கம் ஏமாற்றுவதாக பேசினார்” தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்து அவர்களுடன் கைகோருக்க வேண்டிய உணர்வு முஸ்லிங்களுக்கு இருந்தது. எங்களின் நியாயத்தை மறுக்கும்போது எங்களின் பாணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி வரும். ஒரு கையால் தட்டி சத்தம் வராது. இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டும். முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது என்றார்.