முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 1656 மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட மாணிக்கபுரம் பகுதியை சேர்ந்த 44 அகவையுடைய நபரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 577 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் 346 பேர் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் 231 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 1224 குடும்பங்களை சேர்ந்த 3179 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 487 குடும்பங்களை சேர்ந்த 1156 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து வெளியேறியுள்ள நிலையில் 737 குடும்பங்களை சேர்ந்த 2023 பேர் தொடர்ந்தும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.