முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு மற்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஊடகங்கள் செய்தி சேகரித்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கோம்பாவில் கிராமசேவையாளரால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள திம்பிலி குளத்தின் எல்லைக்கு உட்பட்ட பிரதேச செயலக எல்லை மற்றும் வனவள திணைக்கள எல்லைக்குட்ப்பட்ட சுமார் 30 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கல்வியலாளர்கள், வைத்தியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், புதுக்குடியிருப்பு நகரப்பகுதியின் பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களால் மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த காடழித்து காணி பிடிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் முல்லைத்தீவு கோம்பாவில் பகுதியில் உள்ள திம்பிலி குளக்கரையில் சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த சம்பவ இடத்துக்கு நிலமைகளை அறிய ஊடகவியலாளர்கள் சென்றிருந்தனர். இது குறித்து காவல்துறை தரப்பில், காடழிப்பு தொடர்பில் எந்த முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர். குறித்த விடயம் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய கோம்பாவில் கிராமசேவையாளரால் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.