முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொல்ல முயன்ற குற்றவாளியை இந்தியா நாடுகடத்துமா?

சென்னையில் கைதான இலங்கையைச் சேர்ந்த கிம்புலா அலே குணா பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் தங்களிடம் ஒப்படைக்க பேச்சு நடப்பதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரா கூறினார்.

இலங்கையைச் சேர்ந்த கிம்புலா அலே குணா பல ஆண்டுகளாக தமிழகத்தில் பதுங்கி இருந்த நிலையில் கடந்த மாதம் சென்னையில் கைதானார். இந்த தகவலை இலங்கை அரசுக்கு இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்நாட்டு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரா நேற்று(8) கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகா 1999ஆம் ஆண்டு கொழும்பு நகரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றபோது,  நடந்த பேரணியில் பெண் விடுதலைப்புலி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்; சந்திரிகா காயம் அடைந்தார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய கிம்புலா அலே குணா உடனடியாக இந்தியா தப்பிச் சென்றதாக தெரிகிறது. அவர் மீது விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சந்தேகம் உள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த அவரை எங்களிடம் ஒப்படைப்பது தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்த விவகாரம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை இண்டெர்போல் உதவியுடன் கைது செய்ய அரசு முடிவெடுத்திருப்பதாக வீரசேகரா கூறினார்.