முன்னாள் எம்.பி. துமிந்தவை விடுதலை செய்ய நடவடிக்கை – அரச தரப்பு தீவிர முயற்சி

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வா ஓரிரு வாரங்களில் விடுதலை செய்யப்படுவார் என்று அரச உயர்மட்டம் ஒன்று தெரிவித்தது.

முன்னாள் அமைச்சர் பாரதலக்ஷமன் பிறேமசந்திரவின் கொலை வழக்கில் துமிந்த சில்வா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது தண்டனையை அனுபவித்து வரும் அவர் தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவில் துமிந்த சில்வா சார்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முதலில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்க முடியும் என்று ஆணைக்குழு முடிவுக்கு வந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஜனாதிபதி பொது மன்னிப்பில் துமிந்த சில்வாவை விடுதலை செய்ய ஆணைக்குழு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.