முகமாலையில் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்

முகமாலை பகுதியில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் மனித எச்சங்கள் காணப்படாத நிலையிலேயே இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் மேலும் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டால் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகமாலைப் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதன் மூன்றாம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டிருந்தன. நேற்றுப் புதிதாக மனித எச்சங்கள் அடையாளம் காணப்படாததை அடுத்து அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.