மியான்மர் தெருக்களில் மண்டியிட நானும் தயார் – திருத்தந்தை பிரான்சிஸ்

“மியான்மர் தெருக்களில் நானும் மண்டியிடத் தயார். தயவு செய்து வன்முறைகளை நிறுத்துங்கள்“ என அவர்  திருத்தந்தை  பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக வத்திக்கான் நூலகத்திலிருந்து இணைய வழியில் இடம்பெற்ற வாராந்த சந்திப்பின்போது திருத்தந்தை  பிரான்சிஸ் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மரின் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு இடம்பெறும் மக்கள் போராட்டங்களின்போது இதுவரை 180 பேர் இராணுவத்தினரால்  கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் “மியான்மரில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையைப் மிகுந்த சோகத்துடன் உணர்கிறேன். அங்கு பலர், பெரும்பாலும் இளையவர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் என   திருத்தந்தை  பிரான்சிஸ் கூறியுள்ளார்.

மேலும் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைகளை தொடங்குங்கள் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த வாரம் மியான்மரில்    இராணுவத்தினர் முன்னிலையில் கன்னியாஸ்திரி ஒருவர் மண்டியிட்டு மக்களைச் சுட வேண்டாம் என மன்றாடிய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இவற்றைக் கருத்தில் கொண்டே தானும் மியான்மர் தெருக்களில் மண்டியிடத் தயார் என   திருத்தந்தை  பிரான்சிஸ் தெரிவித்துள்ளதாகக் கருதப்படுகிறது. பெளத்த நாடான மியான்மரில் 8 இலட்சத்துக்கு சற்றுக் குறைவான ரோமன் கத்தோலிக்கர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மியான்மர் ரோமன் கத்தோலிக்க தலைவர் சார்லஸ் மாவுங் போவும் அங்கு தொடரும் இரத்தகளரியை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார்.