மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை சுட்டுக்கொன்ற இராணுவம்

மியான்மரில் ஒரே நாளில் 82 பேரை இராணுவம் சுட்டு கொன்றுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மரின் பாகோ நகரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொது மக்கள் போராட்டங்கள் நடத்திய போது அவர்கள் மீது இராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது.  இந்த சம்பவத்தில் 82 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 14-ம் திகதி   யான்கூன் நகரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக பாகோ நகரில் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மியான்மரில் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளதாக மியான்மர் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 46 பேர் சிறுவர்கள் என்றும் அந்த அமைப்பு கூறி உள்ளது.