மியான்மரில் இராணுவ கணக்குகளுக்கு ‘முக நுால்’  நிறுவனம் தடை

மியான்மரில் ,இராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், இராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக  முக நுால் நிறுவனம்   அறிவித்துள்ளது.

மியான்மரில் ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், மீண்டும் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தவும், கைது செய்து வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவி ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்க கோரியும் வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகிறார்கள்.

ஆனாலும் இராணுவம் அடிபணியவில்லை. ராஜ தந்திர முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில், மியான்மரில் இராணுவத்துடன் தொடர்புடைய அனைத்து கணக்குகளையும், இராணுவ கட்டுப்பாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் தடை செய்வதாக  முக நுால் நிறுவனம்   அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பிந்தையை நிலைமையை அவசர நிலையாக பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இதே நேரம் கொடிய வன்முறை போன்ற நிகழ்வுகளால்தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக  கூறியுள்ளது.

மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மியாவடி டெலிவிஷன் சேனல், எம்.ஆர்.டி.வி. அரசு டி.வி. சேனல் இரண்டின் கணக்கையும்  ஏற்கனவே முக நுால் நிறுவனம் முடக்கியமை குறிப்பிடத்தக்கது.