மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு: மருத்துவ பணியாளர்கள் போராட்டம்

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்த நாட்டு இராணுவம் தேர்தலில்  முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டி வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை  கைது செய்து சிறை வைத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.
மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு  உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட இராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களில் சுமார் 70 மருத்துவனைகள் மற்றும் மருத்துவ துறையினர் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மியான்மர் சட்ட ஒத்துழையாமை இயக்கம் என்ற குழு தெரிவித்துள்ளது.