மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறை- ஐ.நா. கண்டனம்

மியான்மரில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஐ.நா.பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.  ஆனால் இந்த வெற்றி முறைகேடாக பெறப்பட்டது என குற்றம்சாட்டி வந்த அந்த நாட்டு இராணுவம் கடந்த மாதம் 1-ம் திகதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் என ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் இராணுவம்  கைது செய்தது.  மேலும்  ஆங் சான் சூகி மீது இராணுவம் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதி மன்றில் விசாரணை நடத்தி வருகிறது.‌

இதற்கிடையில் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இராணுவமும் போராட்டக்காரர்கள் மீதான தங்களது அடக்கு முறையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.  இது வரையில் 70க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில்  தலைமறைவாக உள்ள மியான்மர் நாட்டின் துணை அதிபர், இராணுவ ஆட்சிக்கு எதிரான புரட்சியை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளதோடு அதில் மக்கள் கைகோர்க்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.