மாவட்ட பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது – சி.வி.கே.சிவஞானம்

யாழ். மாவட்ட பாடசாலைகள் தேசியப்பாடசாலைகள் ஆக்கப்படுதல் ஜனநாயகத்திற்கு விரோதமானது என வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஆளுநருக்கு  அனுப்பிய கடிதத்தில்,

யாழ்.மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள்  தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் அவை வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இருந்து மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் கடந்த வாரம் ஊடகச் செய்திகளின் மூலமாக அறிய வந்துள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை இயங்கிய காலத்தில் இவ்வாறான முயற்சிகள் யாவும் இங்கே மறுதலிக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

இந்த நிர்வாக அதிகார மன்றத்தின் தர்க்கவியல் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. அதாவது நிர்வாக குறைபாடுகள் காரணமாக இருப்பினும் அவை மாகாண சபையினால் சீர்திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வது ஒரு பிரச்சினை அல்ல.

அவற்றைவிட தேசியப் பாடசாலைகளுக்கு ஏதாவது மேலதிக வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாயின் அவற்றை மாகாண நிர்வாகத்தின் மூலம் வழங்க முடியும். அவற்றுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த மகாண சபை அதிகாரத்தை பிடுங்கி மத்திக்கு கொண்டு செல்லுதல் அதிகாரப்பகிர்வை முழுமையாக மீறும் செயல் என அவர் குறித்த கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.