மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்?

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராஜ்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இறுதிப் பகுதி.

கேள்வி

இலங்கையில்  தேர்தல் நடந்த சமயம், தமிழ் மக்களுக்கு ஒரு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேசத்தை நாடப் போகின்றோம் என்று அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்களின் அணுகுமுறைகளைப் பார்க்கும் போது,  சர்வதேசத்திற்கு நாங்கள் போய் செய்வது கடினமாக இருக்கப் போகின்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு குற்றமிழைத்தவர்களை  விசாரிப்பதற்கு ஒரு அழுத்தம் கொடுக்கலாம் என்று மாறி வருவதை உணரக்கூடியதாக இருக்கின்றது. இது எவ்வளவிற்கு சாத்தியம்? இது தொடர்பாக யாராவது முயற்சி எடுக்கிறார்களா?

பதில்

ஆம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான முயற்சி என்பது இரண்டு மூன்று தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. அதை முன்னகரத்தி செல்வதற்கு ஒரு நாடு வம் போது தான் வெற்றி தோல்வி என்பது இருக்கின்றது. ஒரு நாடு சம்பந்தமாகத் தான் அதை எடுத்துக் கொண்டு செல்லலாம். சட்டங்கள் அப்படியிருக்கின்றது. இலங்கை அதில் ஒரு பங்குதாரராக இல்லாதிருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது. சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது என்பது நல்ல விடயம். ஆனால் அதற்கான அரசியல் ஏது நிலைகளை சர்வதேச அழுத்தங்கள் ஊடாகவும்,  சர்வதேச செயற்பாடுகள் ஊடாகவும் தான் ஏற்படுத்த முடியும். இது ஒரு நல்ல விடயம். இதிலே நான் முக்கியமாக சொல்ல வருகின்ற விடயம்,

இந்த நிலையை உருவாக்குவதற்கு இன்று இருக்கும் சந்தர்ப்பம் அதாவது இலங்கை அரசாங்கம் இந்த விசாரணையிலிருந்து வெளியே செல்ல முயற்சிக்கும் நேரம் இந்த நிலைப்பாடை எடுப்பது முக்கியம். இந்த நிலைப்பாட்டை எடுத்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பில் உள்ள நாடுகளைக் கடந்து இருக்கும் நாடுகளுக்கும் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம். இந்த செயற்பாடு ஒரு வினைத்திறனுடன் நடப்பதாக நான் காணவில்லை. வினைத்திறனுடன் நாங்கள் அதை செய்வோமாக இருந்தால், சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஒரு சரியான வழி உருவாகும். அதற்கான ஏது நிலைகள் இருக்கின்றது.

இலங்கை விசாரணை தொடர்பான முன்னெடுப்புகள் ஒன்றையும் எடுக்கவில்லை. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் என்பது, அவர்கள் இந்த விசாரணைகளை இழுத்தடித்து, இதிலிருந்து தப்பிக் கொள்வதற்காக அசியலையும், புவிசார் அரசியலையும் பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற விடயத்தை மிகத் தெளிவாக முன்வைத்து, இன அழிப்பிற்குத் தேவையான விசாரணை தான் எங்களுக்குத் தேவை என்பதை மிகத் தெளிவாக வைக்க வேண்டும்.

இந்த இடத்தில் தெளிவாகப் பார்க்கப்படக்கூடிய உடனடிப் பிரச்சினைகளையும் நாங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும். அதில் காணாமல் போனவர்கள் பிரச்சினை தொடர்பான முடிவு இன்று சர்வதேச அளவிலே எடுக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். ஏனெனில், சில சில விடயங்களை சர்வதேசம் எடுக்கலாம். காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்கின்றோம் என்று கூறி இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்கள் இத்தனை வருடங்களாக அதைக் கேட்டுக் கேட்டு எந்தவித பயனும் இல்லாமல் இருக்கின்றது. இது தொடர்பாக உடனடியாக சர்வதேச விசாரணை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

எங்களின் இன அழிப்பு தொடர்பாக பேசும் போது, அசியலைப் பற்றிப் பேசாமல் இருப்பது முக்கியம். அரசியல் தீர்வையும், இந்த விடயத்தையும் ஒன்றாக இணைத்து சர்வதேசத்துடன் பேசும் போது, சர்வதேசத்தின் மத்தியில் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இந்த இன அழிப்பை முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றோம் என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கும். அதை நாங்கள் ஏற்படுத்தக் கூடாது.

ஏனெனில், எங்களின் இன அழிப்பிற்கான நீதி விசாரணை, இன அழிப்பிற்கான பாதுகாப்பு என்பது வேறு. அதற்கான நிரந்தரத் தீர்வாக அரசியல் தீர்வு என்பது நிச்சயமாக நாங்கள் பார்க்க வேண்டிய விடயம். இவை இரண்டையும் இணைப்போமாக இருந்தால், அரசாங்கம் இன அழிப்பு விசாரணையிலிருந்து தப்பிக் கொள்வதற்கு, நாங்கள் அரசியல் தீர்வைக் கொடுக்கப் போகின்றோம் என்று பேரம் பேசும் நிலையைக் கொண்டு வந்து எங்கள் செயற்பாடுகளை பலவீனப்படுத்தியதை நாங்கள் கடந்த காலங்களில் பார்த்தோம். அந்தக் காரணங்களுக்காக இந்த இரண்டையும் இணைக்கக் கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

முற்றும்