அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தமிழர் தாயகத்தை முழுமையாக இராணுவ மயப்படுத்தும் தூரநோக்கோடு இலங்கை அரசு வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முப்படைகளையும் குவித்துவருவதோடு தேடுதல்கள் என்ற போர்வையில் பொதுமக்களையும் கடுமையாக அச்சுறுத்திவருகிறது.
இதன் அடிப்படையில் அண்மைக்காலமாக பல்கலைக்கழக மாணவர்களை முடக்கும் நோக்குடன் பயங்கரவாத தடுபப்பு சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.
தமிழ் மக்களின் உரிமைக்காக அண்மைக்காலமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் தன்னெழுச்சிமிக்க போராட்டங்களை முடக்கவேண்டும் என்ற உள்நோக்குடனேயே இலங்கை அரசு திட்டமிட்டு மாணவர்களை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி கைது கைது செய்யப்பட்டடுள்ள தமது சக மாணவர்கள் இருவரையும் சிற்றுண்டிசாலை ஊழியரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (15) காலை பல்கலைக்கழக முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் இதில் மாணவர்களின் விடுதலையையும் உரிமையையும் வலியுறுத்தி மாணவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக கோசங்களை எழுப்பினார்கள்.