மாகாண சபைகள் குறித்து டில்லி தீர்மானிக்க முடியாது! ஜனாதிபதியே தீர்மானிப்பார்; சரத் வீரசேகர

மாகாண சபைகள் விவகாரம் என்பது இலங்கையின் உள்விவகாரம் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும். ஏனைய நாடுகளின் தலைவர்கள் அல்லர் எனவும் கூறினார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“நாங்கள் மாகாண சபைகளைத் தொடர்ந்தும் தக்கவைக்கவேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிட முடியாது. நாங்கள் சுதந்திரம் மற்றும் இறைமை மிக்க நாடு. இந்தியா எங்கள் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது.

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், இலங்கை பல நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும். அதில் ஒன்று விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவது. எனினும் இந்தியா இதனை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக இந்திய – இலங்கை ஒப்பந்தம் எவ்வளவு வலுவானது என்ற கேள்வி எழுகின்றது” என்றார்.