மஹர சிறைச்சாலை சம்பவம் குறித்து அனைத்துத் தகவல்களும் வெளியிடப்படும் – அலி சப்ரி

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். அந்தச் சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு;

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழுவினர் தமது பணிகளை முன்னெடுப்பார்கள். ஒரு மாதத்துக்குள் முழுமையான விசாரணை அறிக்கையையும், ஒரு வாரத்துக்குள் இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளேன்.

அத்துடன், மேற்படி சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினரும் தனியாக விசாரணை நடத்துவார்கள். இதற்கான பணிப்புரையை பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ளார். இப்படியொரு சம்பவம் நடந்திருக்ககூடாது என்பதுதான் அனைவரினதும் எதிர்ப்பார்ப்பு. அரசு என்ற வகையில் எமது கவலையை வெளியிடுகின்றோம். பின்னணி தொடர்பில் முழுமையாக ஆராயந்த பின்னர் தகவல்கள் முன்வைக்கப்படும். இதற்காக சிறிதுகாலம் வழங்குமாறு கோருகின்றேன்” என்றார்.