மலையக மக்கள் முன்னணியின் முக்கிய பதவிகளில் மாற்றம்; தலைவர் இராதாகிருஷ்னன்

மலையக மக்கள் முன்னணியின் புதிய செயலாளர் நாயகமாக பேராசிரியர் எஸ் விஜயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தலைவராக ஏ.லோரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூட்டம் கொழும்பில் சபாயர் விருந்தகத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் கொழும்பில் நேற்று கூடி இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டம் கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன், கூட்டத்தில் கட்சியின் அரசியல் துறை தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் பிரதி செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன் உட்பட கட்சியின் அனைத்து உயர்பீட கவுன்சில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்பு மலையகமக்கள் முன்னணியை மறு சீரமைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் ஒரு கட்டமாக இன்று கட்சியின் புதிய செயலாளராக பிரதி செயலாளராக கடமையாற்றிய பேராசிரியர் விஜயசந்திரன் செயலாளர் நாயகமாக ஏகமனதாக கட்சியின் உயர்பீடஅங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வந்தலோரன்ஸ் தொடர்ந்தும் சுகவீனம் காரணமாக தன்னால் செயலாளராக செயற்பட முடியாது என்ற காரணத்தைத் தெரிவித்ததை தொடர்ந்து தான்அந்த பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு பிரதி செயலாளராக இதுவரை கடமையாற்றிய பேராசிரியர் விஜயச்சந்திரன் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கூட்டத்தின்போது முன்னாள் செயலாளர் நாயகம் லோரன்ஸ் கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் அவர் கட்சியோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் கட்சியின் உயர்பீடம் அங்கத்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவரைகட்சியின் பிரதித் தலைவராக ஏகமனதாகத் நியமிக்கப்பட்டிருக்கின்றார்” என அவர் மேலும் தெரிவித்தார்.