மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவு சந்தேக நபர்கள் மீது இன்று விசாரணை

விடுதலைப் புலிகள் மீளுருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய ஒத்துழைப்பு வழங்கினர் என்ற குற்றச்சாட்டில் அரசியல் கட்சி உறுப்பினர் ஒருவர் உட்பட 12 பேர் அண்மையில் மலேசியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் பிரதானி அயோப் கான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த நபர்கள் இன்றும் எதிர்வரும் வியாழக்கிழமையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேக நபர்கள் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 2 சந்தேக நபர்களும் எதிர்வரும் வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.