மயிலிட்டி மக்கள் இரு வேறு இடங்களில் போராட்டம்!

போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள் நாளைய தினம் (15) யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

இதற்கு காணியுரிமைக்கான மக்கள் இயக்கம் பூரண ஆதரவு வழங்கவுள்ளதாகவும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்

மயிலிட்டியிலிருந்து இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், புலம்பெயர்ந்தும் வசித்து வருகின்ற மயிலிட்டி மக்கள் தமது சொந்த காணிகளில் வாழ முடியாது துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.

மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது காணியுரிமைக்கான மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

அதிகளவான தனியார் காணிகள் வடக்கிலே முப்படைகளும் வைத்திருக்கின்றனர்.

வயாவிளான் பகுதியில் மக்களுடைய காணிக்குள் இப்போதும் பாரிய இராணுவ மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு கொண்டிருக்கின்றது என்று காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பலாலி சந்தி பகுதியிலும் நாளைய தினம் காலை 08.30 முதல் மாலை 4.30 வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.