மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கீழடி தொல்பொருட்கள் கண்காட்சி

மதுரை கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் கண்காட்சியை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொளி மூலம் நேற்று(01) திறந்து வைத்தார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முன் அங்கு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது கீழடி அகழாய்வு நடைபெற்ற பகுதி மூடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கண்காட்சி நடத்தப்படும் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்திருந்தார்.

அதன்படி, கீழடி தொல்லியல் பொருள் கண்காட்சித் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கட்காட்சியை தமிழக முதல்வர் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறறந்து வைத்தார். இதையொட்டி, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் ப.அன்புச்செழியன், தொல்லியல்துறை உதவி ஆணையாளர் சிவானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தளத்தில் மூன்று அரங்குகளில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள சுடு சிற்பங்கள், பானை டுகள், அடுப்பு, யானை தந்தத்தில் செய்யப்பட்ட பொருட்கள், சங்கு வளையல்கள், குறுபவளம் மோதிரதக் கல், சிவப்பு மற்றும் கறுப்பு நிற பானை ஓடுகள், சூதுபவள மணிகள், சங்ககால மக்களின் எழுத்தறிவு குறித்த பொருட்கள், கீறல்கள், குறியீடுகள், கீழடி மக்களின் நீர் மேலாண்மை, கட்டடக்கலை, நகர அமைப்பு, உறை கிணறு, கூரை ஓடுகள், கீழடி அகழாய்வு குழிகளின் மாதிரி, காளை எலும்புகள், பல்வேறு விலங்கினங்களின் கொம்புகள், இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள், தங்க ஆபரணங்கள், பொழுதுபோக்கு  மற்றும் விளையாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட பகடைக்காய்கள், ஆட்டக்காய்கள், சுடுமண் சக்கரம், வட்டம், சுடுமணி காதணிகள், கண்ணாடி மணிகள், நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட தக்களி, மண் குடுவை, பானை வனைதல் தொழில்நுட்பம் என 600இற்கும் மேற்பட்ட அகழாய்வுப் பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

keelady2 மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கீழடி தொல்பொருட்கள் கண்காட்சிமேலும் கீழடியில் கால்நடை வளர்ப்பு, வேளாண்மை தொழில் மாதிரி படங்கள், அகழாய்வுகளின் வரலாறு, வைகை நதி தொடங்கி முடிவடையும் மாதிரி வரைபடம், தமிழகத்தில் தொல்பொருள், பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களின் விபரங்கள், பிராமி கல்வெட்டுகள் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன.

காலை 10 மணி முதல் மாலை 6மணிவரை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதிக்கும் வரை இக்கண்காட்சி தொடர்ந்து நடத்தப்படும் என்று தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் தொல்லியல் பொருள் கண்காட்சியில், இந்தியாவில் முதன் முறையாக விஷ்ஷுவல் றியாலிட்டி தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, அதற்கென தனியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டு, அதற்கான உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில், பார்வையாளர்கள் கண்ணாடி போன்ற உபகரணத்தை அணிந்து கொண்டு அதற்கான கருவியை இயக்கும் போது, கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களை நமது கைகளால் புரட்டிப் பார்ப்பது போன்று உணர முடிகின்றது.

மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பார்வையாளர்கள் நடந்து செல்லும் போது, கீழடி அகழாய்வு நடைபெற்ற பகுதியின் மீது நடந்து செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.