மட்டக்களப்பில் மேலும் பல இடங்களை அபகரிக்க திட்டமிடும் அரசு

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை, அரச அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டனர்.

அதைத் தொடர்ந்து அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள்  குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

இப்பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன்,  தொல்லியல் சான்றுகளும் அங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும், இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று சொல்லி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசு செயற்பட முனையக் கூடாது, அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கக் கூடாது, அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும்  என குறித்த  பகுதியைப் பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள்  தெரிவித்துள்ளனர்.