மட்டக்களப்பில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துவருவது தொடர்பில் ஆய்வு

மட்டக்களப்பில் தொழுநோயின் தாக்கம் அண்மைக்காலமாக அதிகரித்துவருவது தொடர்பில் ஆராயும் வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதன்போது மண்முனை வடக்கு பிரதேசத்தில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த ஆண்டு 348 திட்டங்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில்
முன்னெடுக்கப்படுவதுடன் அதற்காக சுமார் 203மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பிரிவுக்குட்பட்ட மட்டிக்கழி,வேலூர் ஆகிய பகுதிகள் டெங்கு அபாயமுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினரால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அண்மைக்காலமாக தொழுநோயின் தாக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவருவதாகவும் இது ஒரு தொற்று நோய் எனவும் ஆனால் சிலர் இதனை மறைக்கமுற்படுவதாகவும் இங்கு சுகாதார பிரிவினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கையில் அதிகளவான தொழுநோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 28பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டு நாவற்குடா,நாவற்குடா தெற்கு,மஞ்சந்தொடுவாய் பகுதியிலேயே அதிகளவான தொழுநோயாளர்கள் அடையாளம் காண்பபட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதேபோன்று சத்துருக்கொண்டான் மற்றும் கொக்குவில் ஆகிய பகுதிகளிருலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார துறையினர் இங்கு சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் மக்கள் போதிய அக்கரை காட்டவில்லையெனவும் இதற்கு ஒரு தனிகுழு அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைய சுகாதார துறையினர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் இணைந்து இதற்கான பணிகளை முன்னெடுப்பது குறித்து ஆராயப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருந்து கொண்டுசெல்லப்படும் கழிவுகள் திராய்மடு பகுதியில் சேகரித்து வைக்கப்படுவதனால் அங்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

batt oct 2019 2 மட்டக்களப்பில் தொழுநோயின் தாக்கம் அதிகரித்துவருவது தொடர்பில் ஆய்வுஇதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் வசிக்காத பகுதியில் காணியொன்றை தெரிவுசெய்து அங்கு வைத்தியசாலையின் கழிவுகளை புதைப்பதற்கு நடவடிக்கையெடுப்பதுடன் அது தொடர்பில் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அறிவுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேபோன்று மட்டக்களப்பு கோட்டைமுனை வித்தியாலயத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 66மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு அதிகம்பெற்று சித்திபெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் இடநெருக்கடியை தீர்ப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.