நத்தார் ஆராதனையின்போது மட்டக்களப்பு மரியாள் பேராலயத்திற்குள் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் 14வது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று (25) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவு நிலைய மண்டபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
2005.12.25ம் திகதி அதிகாலை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு திருப்பலி ஆராதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் ஆயுததாரிகளால் சுட்டு படுகொலைசெய்யப்பட்டார் ஜோசப்பரராஜசிங்கம், அன்னாரின் படுகொலை தமிழ் மக்களிற்கு மாத்திரமல்லாது ஜக்கியத்தையும் சமாதானத்தையும் விரும்பும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்க்கு முன்னின்று உழைத்த தலைவர்களுல் ஒருவராக மாமனிதராக கௌரவிக்கப்பட்ட அன்னாரின் 14 வது ஆண்டு நிறைவு தினத்தை அனுஷ்டிக்கும் நினைவு நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் வாலிபர் முன்னணி தலைவர் லோ.திபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்க கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்இகனகசபை, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பிரதேசசபைகளின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாமனிதர் ஜோசப் பரராசசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடார் ஏற்றப்பட்டு மலரஞ்சலியுடன் அஞ்சலி நிகழ்வு உணர்வு ரீதியாக நடைபெற்றது.
1960களில் தமிழரசு கட்சியில் இணைந்து கொண்ட இவர் பத்திரிகை துறையிலும் அதிகம் ஈடுபாடுகொண்டிருந்தார். அறவழியில் போராடி தமிழ் மக்களின் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்க்காக ஜக்கிய நாடுகள் சபை வரை உரக்க குரல் கொடுத்த அன்னாரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு என்றால் மறுக்க முடியாது.