மகிழ்ச்சியான நத்தார் தினம் அல்ல! மன்னார் மறை மாவட்ட ஆயர்

இம்முறை நத்தாரை தினத்தினை மன நிறைவாக மகிழ்ச்சி அடைகின்றோம் என்று கூற இயலாத நிலையில் இருக்கின்றோம் என மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

“நாங்கள் இந்த வருடத்தை எடுத்துக் கொண்டால் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம் பெற்ற குண்டு வெடிப்புக்களினால் பலர் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். இது எமக்கு பெரிய சோகத்தை தந்துள்ளது.

அந்த சோகம் கத்தோழிக்க மக்களுக்கு மாத்திரம் இல்லை. அந்தந்த குடும்பங்களுக்கு மாத்திரம் அல்ல. முழு உலகத்தையுமே தாக்கி இருக்கின்றது. எனவே தான் நாங்கள் இவ் வருட நத்தாரை நோக்கும் போது மன நிறைவாக மகிழ்ச்சி அடைகின்றோம் என்று கூற இயலாத நிலையில் இருக்கின்றோம். ஆயினும் இயேசு நாதர் எமக்கு நம்பிக்கையை கொண்டு வந்திருக்கின்றார். ஒரு எதிர் நோக்கை தந்திருக்கின்றார்.

அந்த மட்டில் நாங்கள் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமைய வேண்டும். நாங்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும். மற்றவர்கள் நன்றாக வாழ்வதற்கு நாங்கள் உதவ வேண்டும் என்று கருதி நாம் வாழ வேண்டும்.

எத்தனையோ பேர் உணவின்றி, உடை இன்றி தவிக்கின்றார்கள். எத்தனையோ பேர் தங்களது நாளாந்த வாழ்க்கையை கூட கொண்டு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

இந்த கால கட்டத்திலே அடை மழை பெய்து நீர் அதிகரித்ததால் வெள்ளத்தில் அகப்பட்டு எத்தனையோ மக்கள் பாடுபடுகின்றனர். அவர்கள் இன்று அகதிகளாக வெவ்வேறு இடங்களில் தங்கி இருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலையிலேயே நாங்கள் எமது தலைவராம் ஆண்டவர் இயேசு நாதரிடம் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவின் போது முழு விசேடமாக மன்றாடி கேட்கக் கூடியது தான் எங்கள் மத்தியில் அமைதியையும், எங்களுக்கு ஒவ்வொரு நாளும் எல்லோறும் சிறந்த வாழ்க்கை வாழக்கூடிய ஒரு எதிர் காலத்தை பெற்றுத்தர கேட்பது.

அத்தோடு நாங்கள் அனைவரும் பாதுகாப்புடன் மற்றவர்களை அரவணைக்கும் விதத்தில் வாழ பிறந்திருக்கும் கிறிஸ்து எங்களுக்கு அருள் வளம் ஈன்றி எங்களை பலப்படுத்த வேண்டும்.

ஆகையினால் உங்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.