மகாவலி திட்டத்துக்குள் 6 கிராமங்களை கொண்டுவருவதை நிறுத்த வேண்டும் – சார்ள்ஸ்

முல்லைத்தீவு மாவட்ட த்தில் 6 கிராமங்களை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தும் நடவடிக்கையை அமைச்சர் சமல் ராஜபக்ச உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழான 5 ஒழுங்கு விதிகள் மற்றும் மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

அமைச்சர் சமல் ராஜபக்ச 2020 ஆம் ஆண்டு நவம்பர் மதம் அவரது அமைச்சில் எமது கோரிக்கைக்கு அமைவாக மகாவலி தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்தினார். அந்தக்கூட்டத்தில் 13 பாராளுமனர் உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை கடிதத்தை முன்வைத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துரைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் இருக்கின்ற கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு ,கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மேற்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, செம்மலை கிழக்கு போன்ற 6 கிராம அலுவலர் பிரிவுகளை பிரதேச செயலக நிர்வாகத்திலிருந்து மகாவலி அதிகார சபைக்கு எடுக்கின்ற முயற்சியை நிறுத்துமாறு அதில் கேட்டிருந்தோம்.

இந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களைத்தவிர ஆளும் கட்சியை சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அமைச்சர் சமல் ராஜபக்ஷ, நான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வந்து ஒரு நியாயமான தீர்வை தரும் மட்டும் இந்த விடயம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையாயியும் எடுக்க வேண்டாமென மகாவலி அதிகாரசபை பணிப்பாளருக்கு அறிவுறுத்தினார். இன்றுவரை அமைச்சர் சமல் ராஜபக்ஷ முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வரவில்லை. ஆனால் அதே செயற்பாடு இன்று நடைபெறுகின்றது.

நான் மகாவலி அதிகாரசபை தொடர்பில் அவருடன் பல தடவைகள் பேசியுள்ளேன். கடந்த நவம்பர் 26 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நான் இவ்விடயம் தொடர்பிலும் காடழிப்பு தொடர்பிலும் பேசியபோது, “இனிமேல் தமிழ் மக்களுக்கு இவ்வாறான அநியாயங்கள் நடக்க விடமாட்டேன். பழையவற்றை எல்லாம் மறப்போம். நான் அங்கு வந்து சரியான முறையில் தீர்வு தருகின்றேன்” எனக்கூறியிருந்தார்.

அண்மையில் அமைச்சர் சமல் ராஜபக்ச அனுராதபுரம் மல்வத்து ஓயா திட்டத்துக்கு வந்திருந்தார். எமக்கும் அழைப்பு கிடைத்திருந்தது. அமைச்சர் சமல் என்பதனால் நாமும் அதில் பங்கேற்றோம். அதை அவர் பாராட்டியிருந்தார். அவர் மீது நம்பிக்கை வைத்துதான் நாம் செயற்படுகின்றோம். ஜனாதிபதியின் அண்ணன், பிரதமரின் அண்ணன், முக்கிய துறையின் அமைச்சர். 25 மாவட்டங்களின் அரச அதிபர்களுக்கும் பொறுப்பானவரான சமல் ராஜபக்ஷ கூறிய விடயத்தையே நடைமுறைப்படுத்தாமல் இந்த அரசு இருக்கின்றது. எனவே இந்த 6 கிராமசேவகர் பிரிவுகளை மகாவலி அதிகாரசபை எடுக்கும் விடயத்தை அமைச்சர் சமல் ராஜபக்ஷ உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.