பௌத்தம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல – மனோ

பௌத்த மதம் என்பது சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் என்ற பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் அவர்களின் உரையை சிறீலங்கா காவல்துறையினர் தமது தொலைபேசிகளில் பதிவு செய்தபோது அவர்களுக்கு பதில் கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் வாழும், சிங்கள, தமிழ், மொழிகளை பேசும் பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் இலங்கை என்ற நாட்டை உருவாக்கவே நாம் முயல்கிறோம். அது எம் நோக்கம்.

ஆனால், தூரதிஷ்டவசமாக ஜனாதிபதியின் அரசு, இந்நாட்டில் “சிங்கள பெளத்தம் மட்டுமே” என்ற நாட்டை உருவாக்க பார்க்கிறது. அது பிழை. அது அவருக்கு புரியவில்லை.

இந்நாட்டின் வரலாற்றில் தமிழருக்கு உரிமை உண்டு. வடக்கு, கிழக்கில் பெளத்த புராதன சின்னங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆம், இருக்கலாம். ஆனால், அவை தமிழ் பெளத்த புராதன சின்னங்கள். இந்நாட்டில் 2ம், 3ம் நூற்றாண்டுகளில் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி இருந்தது. தென்னிந்தியாவிலும் அப்படிதான்.

ஆகவே பெளத்தத்துக்கு “சிங்களம்” என்ற முத்திரையை போட வேண்டாம். தமிழ் மக்களை அரவணைக்க பெளத்தத்தை பயன்படுத்தும்படி ஜனாதிபதிக்கு கூறுகிறேன்.

ஜனாதிபதிக்கு இது புரியாவிட்டால், நான் ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு புரியாததை, அவருடன் இருக்கும், தமிழ் அரசியலாளர்களான டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், வியாழேந்திரன், பிள்ளையான் போன்ற எம்பிக்கள், அமைச்சர்கள் சொல்லித்தர வேண்டும். அமைச்சர் அலி சப்ரியும் சொல்லித்தர வேண்டும்.

தெரியாவிட்டால், சொல்லித்தர வேண்டுமல்லவா? இவற்றை ஜனாதிபதி அறிந்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஜனாதிபதிக்கு எங்கள் செய்தி. இதை அவருக்கு கொண்டு போய் சொல்லுங்கள். நாம் நாட்டை உருவாக விழைகிறோம். அவரது அரசு நாட்டை அழிக்க விழைகிறது.