டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் வயதானோர் காலில் புண், முதுகுவலி, முழங்கால் வலி என்று அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சிங்கு எல்லையில் மசாஜ் (massage) மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் , தரைவிரிப்புகளுடன் பஞ்சாபிலிருந்து கொண்டு வந்த வீட்டிலேயே தயாரித்த வலிநிவாரணி எண்ணெய் மற்றும் களிம்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 70 நாட்களைக் கடந்து விட்டது.
பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னும் அரசும் விட்டுக் கொடுப்பதாக இல்லை இவர்கள் போராட்டத்தையும் உடனடியாக நிறுத்துவதாக இல்லை.
இந்நிலையில், விவசாயிகள் முதுகுவலி, உடல் வலி, உள்ளங்காலில் புண் என்று அவதிப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக 22 வயது விவசாயி ஒருவர் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குக் கூறும்போது, “வீடுகளில் உள்ள வசதி இல்லாமல் டெண்ட்களிலும், முகாம்களிலும் தங்கியிருப்பது உடல் ரீதியான சிக்கல்களை தோற்றுவித்துள்ளது.
அதுவும் வயதான விவசாயிகளுக்கு கடும் சிரமம், இங்கு போராடும் விவசாயிகள் பெரும்பாலானோர் 50-60 வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே சோர்ந்து போன அவர்களது தசையை புத்துணர்வுப் பெறச்செய்யவே இந்த மசாஜ் மையம் திறக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில், இந்த மசாஜ் மையம் போராடும் விவசாயிகளுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.