பெரும்பான்மை பௌத்தர்கள் ஆட்சியமைக்க சிறுபான்மை முஸ்லிம்களிடம் கையேந்தவேண்டியுள்ளது – அத்துரலிய தேரர்

இந்த நாட்டிலுள்ள தேர்தல் முறைமையை மாற்றுதே பௌத்த பிக்குகள் முன்னுள்ள பிரதான பிரச்சினையாகும் எனவும், விகிதாசார தேர்தல் முறைமையினால் பெரிய கட்சிகள் எந்தவொன்றும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.

அரச நிருவாகம் ஒன்றுக்கான மாறாத கொள்கையொன்றை தயாரிக்கும் தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் ஐந்தாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இன்று (09) கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

இந்த நாட்டிலுள்ள தேர்தல் முறைமையை மாற்றாத வரைக்கும், சிறுபான்மை முஸ்லிம்கள் எம்மை ஆளும் நிலைமை காணப்படுவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார். பெரும்பான்மை பௌத்தர்கள் உள்ள இந்த நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களிடம் ஆட்சியமைக்க கையேந்தும் நிலைமை காணப்படுகின்றது.

இதனால் மகாசங்கத்தினரால் அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ள 10 அம்ச திட்டத்தில் தேர்தல் முறைமை மாற்றம் குறித்த விடயம் முதலிடம் வகிக்க வேண்டும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.