புலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டிலிருந்து 25ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்கள் 5ஆக குறைக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள 21 கிராம அலுவலர் பிரிவுகளின் வாக்காளர்களை, வெளிநாடுகளில் இருந்தாலும் உறவினர்கள் மூலமாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்கள் கடந்த காலங்களில் மீளாய்வு செய்யப்படவில்லை. இந்த ஆண்டும் மீளாய்விற்குட்படுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணையகம் யாழ்.மாவட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இருந்தாலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்கள் மூலம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் அறிவுறுத்தியுள்ளது.

சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் இந்தப் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

1987ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளில் வாக்காளர் பட்டியல் மீளாய்வு செய்யப்படவில்லை. எனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், யாழ். தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 25 ஆயிரத்தால் குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறியப்படுகின்றது.

நகுலேஸ்வரம் (J/226), காங்கேசன்துறை(J/233), காங்கேசன்துறை மத்தி(J/234), காங்கேசன்துறை தெற்கு(J/235), கட்டுவன்(238), தென்மயிலை(J/240), வறுத்தலைவிளான்(J/241), குரும்பசிட்டி(J/242), குரும்பசிட்டி கிழக்கு(J/243), வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), மயிலிட்டி வடக்கு(J/246), தையிட்டி வடக்கு(J/249), தையிட்டி மேற்கு(J/250), மயிலிட்டித்துறை வடக்கு(J/251), பலாலி தெற்கு(252), பலாலி கிழக்கு(J/253), பலாலி வடக்கு(J/254), ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியாக விடுவிக்கப்படவில்லை.

மயிலிட்டி தெற்கு (J/248), பலாலி வடமேற்கு (J/255), பலாலி மேற்கு (J/256) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித்தாலும் சிறப்பு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான விண்ணப்ப படிவங்கள் கிராம அலுவலர் பணியகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்குள்ள தமது உறவினர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

பதிவுகளை மேற்கொள்ளத் தவறுமிடத்து, இங்குள்ள வாக்காளர் பதிவுகளில் வாக்காளர் தொகை குறைந்து செல்லுமாயின், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது யாழ். மாவட்டத்திற்காக 5 ஆசனங்களே ஒதுக்கப்படும். இதை கவனத்தில் கொண்டு விரைவில் முடிவெடுக்கும்படி புலம் பெயர் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.