பிள்ளையானுக்கு ஒரு நீதி; அரசியல் கைதிகளுக்கு மற்றொரு நீதியா? கேள்வி எழுப்பகின்றார் சிவாஜி

பிள்ளையான் சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு அபிவிருத்திக்குழுத் தலைவர் அலுவலகத்தை திறக்க முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு அலுவலகத் திறப்பு விழாவுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்தக் கரிசனையை ஏன்? தமிழ் அரசியல் கைதிகள் மீது அரசு காட்டக்கூடாது.

அரச தரப்பு ஆட்களுக்கு ஒரு நீதியும், ஏனையவர்களுக்கு ஒரு நீதியுமாக இந்த அரசு செயல்படுகிறது. எனவே, இவ்வாறான நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்துவதோடு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும்” என்றார்.