பாலியல் குற்றச்சாட்டின் எதிரொலி! உறுப்பினரை இடைநிறுத்திய தமிழரசுக்கட்சி

பாலியல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் அக்கட்சியினால் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள செட்டிக்குளம் மகாவித்தியாலய ஆசிரியரும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினருமான எம்.எம்ரதனை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தமது கட்சியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளை தலைவரும், முன்னாள் மாகாண அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியை சேர்ந்த குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக வெளியான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக எமது கட்சியின் உறுப்பினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று கூடிய தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை ஆராய்ந்திருந்தது. இந்நிலையில் அவர் மீது கட்சியின் தலைமை விசாரணை ஒன்றை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் வவுனியா மாவட்ட கிளை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அத்துடன் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்று முடியும் வரை அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டமைக்கமைய அவர் கட்சியின்உறுப்புரிமை மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் அங்கு கல்வி பயிலும் 17 வயது மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக செட்டிக்குளம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய பொலிசாரால் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டு. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தமிழரசு கட்சியில் அங்கம் வகித்திருந்ததுடன் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவாகவும் இருந்தவராவார்.